இது ஓர் தமிழ் தகவல் களஞ்சியம்

Sunday, 27 March 2016

யார் கடவுள்..?!

மாலும் மனிதன்
மலரோனும் தான் மனிதன்
ஆலமுண்ட கண்டன் அவன் மனிதன்
சீலமுடன் உற்றுணர்ந்த உகந்த பெரியார்
கற்றுமறிந்தார் இல்லை
- மகான் ஔவையார்



யார் கடவுள்

மனிதன்தான் கடவுள் ஆனான். முற்றுப்பெற்ற ஞானியரே கடவுள். இதை நாமனைவரும் உணர வேண்டுமென விரும்புகிறார் முற்றுப்பெற்று வணக்கத்திற்குரிய கடவுள்நிலையை அடைந்த ஞானியான ஆசான் ஔவையார்.

"மாலும் மனிதன்" - திருமாலும் மனிதனே

"மலரோனும் தான் மனிதன்" - பிரம்மாவும் மனிதன்

"ஆலமுண்ட கண்டன் அவன் மனிதன்" - சிவபெருமானும் மனிதனே

"சீலமுடன் உற்றுணர்ந்த உகந்த பெரியார்
கற்றுமறிந்தார் இல்லை" - இந்த மானிடரே கடவுளாக முடியும். எத்தனை வேதங்களைக் கற்றாலும், இந்த உண்மையை உணர்ந்தோர் எவருமேயில்லையே என வருத்தப்படுகிறார் முற்றுப்பெற்ற ஞானி ஔவைப் பிராட்டியார்.

இதைத்தான் முற்றுப்பெற்ற ஆசான் திருமூலரும்…

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை;
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்;
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே!

என்கிறார். இது முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டியதாகும். மனிதன் முயன்றால், முற்றுப்பெற்ற சித்தர்/ஞானியர் வழி நடந்தால் மனிதரும் கடவுளாகலாம் என்பதே உண்மை. ஏனெனில், கடவுளரும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால், இக்கலிகாலத்தில், அது மிகக் கடினமான ஒன்றாகும். முற்றுப்பெற்ற சித்தர்களைக் குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்குக் மட்டுமே இது சாத்தியம்.

போற்றுவோம் முற்றுபெற்ற சித்தர்களை, அடைவோம் கடவுள் தன்மையை.

இறப்பு என்பது உயிர் இழப்பல்ல, அது உடல் இழப்பு. அகால மரணங்களைத் தவிர மற்ற மரணங்களை நாம் அழுவதை விடுத்துப் பறை அடித்து ஆடிப்பாடி கொண்டாடுவதே தமிழர் மரபு. ஏனெனில் நம் முன்னோர் இறப்பு-பிறப்புப் பற்றித் தெளிவாக அறிந்திருந்தனர். அதாவது உயிரானது ஆக்கப்படுவதும் இல்லை மற்றும் அழிக்கப்படுவதும் இல்லை. நம் உயிரானது பல் வகையான உடல்களுக்குள் நம் வினைகளுக்கேற்ப பிறப்பு-இறப்பு(கர்மா) சக்கரத்தில் மாட்டிப் பிறவிப்பிணியால் தொடர்ச்சியாக அவதியுறுகின்றது.

இவ்வாறான பிறவிப்பிணியை 'முற்றுப்பெற்ற குரு' முகாந்திரமாக நீக்கி, நாம் எங்கிருந்து வந்தோமோ அந்த வீட்டை மீண்டும் அடைவதே ஆன்ம விடுதலை / வீடு பேறடைதல் / இறையுடன் இரண்டறக் கலத்தல் / சாகாக்கல்வி / மரணமிலாப் பெருவாழ்வு / மோட்ச கதி / பேரின்பம் அடைதல் / பேரறிவு பெறல் / முக்தி அடைதல் / இறைநிலை(சிவபதம்) எய்தல் / முற்றுப்பெறல் எனப் பலபெயர்களால் அழைக்கப்படுகின்றன.

இது மனிதப் பிறப்பிற்கே சாத்தியம். ஆதலாலேயே மனிதப் பிறப்பு என்பது மிகவும் அரிதானதாகும். இந்த மனிதப் பிறப்பெடுக்க முன் நம் ஆன்மாவானது மனிதரல்லாத எண்ணிலாப் பிறப்புக்களை எடுத்துள்ளது என்கின்றனர் சித்தபெருமக்கள். பல பிறவிகள் எடுத்த பிறகே இந்த மானிடப்பிறவியை அடைகிறோம். சிவபுராணத்தில் "புல்லாய், பூடாய், புலுவாய், மரமாகி, பல் மிருகமாய், மனிதராய், பேயாய், கணங்களாய், வல் அசுரராய், தேவராய் சொல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் !" என்கிறார் ஆசான் மாணிக்கவாசகப் பெருமான்.

"அரிது! அரிது! மானிடர் ஆதல் அரிது
மானிடராயினும்..
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்தலாயின்
வானவர் நாடி வழி பிறந்திடுமே!"
- ஆசான் ஓளவையார்

பசித்திருந்து நோன்பு இயற்றுவதே தவம். பசித்தோர்க்கு உணவளிப்பதே உயர்ந்த தானம். தானமும் தவமும் செய்பவர்க்கு இறையருள் கைகூடும். அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது. அதனிலும் அரிது கூன், குருடு, செவிடு இல்லாமல் பிறத்தல் அரிது, அதனிலும் அரிது ஞானம் கிடைத்தல் அரிது. அதனிலும் அரிது தானம், தவம் போன்றவை கிடைத்தல் அரிது என்றும். தானமும் தவமும் செய்யும் வாய்ப்புக் கிடைத்துவிட்டால் இறையுடன் இரண்டறக் கலத்தற்கான வழி தானே கிடைத்துவிடும் என்று கூறி இருக்கிறார் ஆசான் ஓளவையார் பெருமாட்டி

பிறவியே அறியாமை மிகு பேதமையென்றும், அந்தப் பிறப்பு-இறப்பு(கர்மா) எனும் பிணியை நீக்கி நாம் வெற்றி பெறுவதே உயர்ந்த அறிவென்கிறார் பிறவிப்பிணி நீக்கிய மகான் திருவள்ளுவப் பெருமான்.

''பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.''
- திருக்குறள் (ஆசான் திருவள்ளுவர்)

ஒருவர் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலையை விரும்ப வேண்டும். அதை (இறையிடம்) வேண்டினால் மற்றவை தானாகவே கிடைக்கும். எனவே, மீண்டும் மீண்டும் பிறந்து துன்பப்படாமலிருக்கப் பேரறிவான "பிறவாமை"யை நாம் இறையிடம் வேண்டுவோம்.

"வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்."
- திருக்குறள் (ஆசான் திருவள்ளுவர்)

எனவே கிடைத்த இந்தப் பிறவியை ஒவ்வொருவரும் வீணாக்காமல் சரியாகப் பயன்படுத்திப் பலன் அடைய வேண்டும் என்கிறார் ஆசான் திருமூலர் பெருமான்.

“பெறுதர்கரிய பிறவியை பெற்றும்
பெறுதற் கரிய பிரானடி பேணார்
பெறுதற் கரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே”
- திருமந்திரம் (ஆசான் திருமூலர்)

ஓம் ஆசான் மாணிக்கவாசகர் திருவடிகள் சரணம்.
ஓம் ஆசான் ஓளவையார் திருவடிகள் சரணம்.
ஓம் ஆசான் திருவள்ளுவர் திருவடிகள் சரணம்.
ஓம் ஆசான் திருமூலர் திருவடிகள் சரணம்.

ஓம் எண்ணிலாக்கோடி சித்த, ரிஷி, கணங்கள் திருவடிகள் போற்றி

நன்றி! <3
-கண்ணன் சூரியா